ஆட்சித்தமிழ் – ஓர் வரலாற்றுப் பாதை * மதிப்புரையாளர் : கவிஞர் இரா. இரவி

https://mail.google.com/mail/?ui=2&ik=b81c859f46&view=att&th=129e956a893fde73&attid=0.7&disp=inline&realattid=f_gbswj6oe6&zwஆட்சித்தமிழ் – ஓர் வரலாற்றுப் பாதை * மதிப்புரையாளர் : கவிஞர் இரா. இரவி

* நூல் ஆசிரியர் : கவிஞர் சு.வெங்கடேசன்

இந்நூல் சென்னை மாகாண சட்டசபையில் தமிழ் ஆட்சிமொழிக்கான தீர்மானத்தை முதன் முதலில் முன்மொழிந்த அ.கஜபதி நாயக்கர் வரவு- செலவு அறிக்கையின் மீதான விவாதத்தை தமிழில் முதன்முதலில் முன் வைத்த பி.இராமமூர்த்தி இருவரின் தமிழ்ப்பற்றையும் நினைவு கூர்ந்து என்று முக்கியமான தகவலைச் சொல்லி நூலை காணிக்கையாக்கி உள்ளார் கவிஞர் சு.வெங்கடேசன். பாரதி புத்தகாலயம் இந்நூலை சிறப்பாக பதிப்பித்து உள்ளது.

எழுத்தாளர் அருணன் அவர்களின் அணிந்துரை முத்திரை பதிக்கின்றது. எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்கிறோம். தமிழைச் செம்மொழியாக மைய அரசு அறிவித்துள்ளது மிக்க மகிழ்ச்சி. யுனெஸ்கோ நிறுவனம் அழியும் மொழிகளில் ஒன்றாக தமிழ் உள்ளது என எச்சரித்ததும் அதிர்ச்சி அடைந்தோம். தமிழ் அழியாமல் காக்க என்ன வழி? ஆட்சித் தமிழ் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். இன்றைக்கும் கூட சில அரசாணைகள் ஆங்கிலத்திலும், ஊதியக்குழு விபர ஏடுகள் ஆங்கிலத்திலும் வருவது வேதனையாக உள்ளது. இதுபோன்ற பல சிந்தனைகளைத் தூண்டும் வண்ணம் ஆய்வு நூலாக இந்நூல் உள்ளது.

பெரியாரின் மொழிச் சிந்தனைகள், ஆட்சிமொழி அரங்கேற்றமும் அதற்கான போராட்டமும் மொழிப் பிரச்சனையும் சட்டமன்றத் தீர்மானமும், திராவிட இயக்கமும் தமிழும் என 4 தலைப்புகளில் நல்ல கட்டுரைகளின் தொகுப்பாக வந்துள்ளது இந்நூல். தந்தை பெரியார் உண்மையான தமிழ்ப்பற்றுடன் எழுத்துச் சீர்திருத்தத்தை அறிமுகம் செய்தார். அது இன்று வரை பலரால் கடைபிடிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வெற்றிகரமாக அமைந்தது. இது போன்ற பல தகவல்கள் உள்ளன.

தமிழ் மொழியை மதத்திடமிருந்தும் கடவுளிடமிருந்தும் பிரிக்க வேண்டும் என குடியரசு இதழில் தந்தை பெரியார் எழுதிய கட்டுரைகள் உள்ளன. தமிழ் மொழி காக்க, நடந்த போராட்டங்கள், செய்த தியாகங்கள் என வரலாற்று உண்மைகளின் தொகுப்பாக உள்ளது நூல்.

புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் வைர வரிகள்

மணக்க வரும் தென்றலிலே குளிரா இல்லை?
தோப்பில் நிழலா இல்லை?
தமிழகத்தின் தமிழ்த் தெருவில்
தமிழ் தான் இல்லை

இந்த வரிகளைப் படிக்கும் போது பாதிதாசன் அன்று பாடியது இன்று வரை தமிழகத்தின் தமிழ்த் தெருவில் தமிழ் தான் இல்லை என்பதை நன்கு உணர முடிகின்றது. மக்களிடையே விழிப்புணர்வு விதைக்கும் நூலாக உள்ளது. மக்களின் அடையாளம் மொழி ஒரு இனத்தை அழிக்க மொழியை அழித்தால் போதும். எனவே இனம் அழியாமல் காக்க, மொழி அழியாமல் காக்க வேண்டிய கடமை நம் அனைவருக்கும் உண்டு.

“அவசரமான நமது அரசு செய்ய வேண்டிய வேலைகள் இருக்கின்றன. ஆங்கிலத்தை அகற்றி, எல்லாத் துறைகளிலும் தமிழ் வந்து விட வேண்டும். எல்லா துறைகளிலும் அதற்கு வேண்டி அவசர நடவடிக்கைகளை நாம் எடுக்க வேண்டும். நீதி, நிர்வாகம், கல்வி, என்ற 3 நாற்காலிகள் தான். அந்த 3 நாற்காலிகளிலும் தமிழை அமர்த்திட வேண்டும். அந்த மூன்று நாற்காலிகளிலும் மற்ற மொழிகளுக்கு இடம் இல்லை என்ற நிலையை ஏற்படுத்த வேண்டும்.

நூலில் உள்ள வைர வரிகள், அதை மட்டும் கடைபிடித்தால் போதும், தமிழ் என்றும் அழியாது இதை நடைமுறைப்படுத்துவதில் சில தடைகள் ஏற்படலாம். அந்த தடைகள் தகர்க்கப்பட வேண்டும். சமரசத்திற்கு இடமின்றி மிகக் கடுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும். மதுரையில் உயர்நீதி மன்ற கிளை வந்து விட்டது. ஆனால் சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் அழகு தமிழில் உயர்நீதி மன்றத்தில் வாதாட உரிமை இல்லை. ஏன்? இந்த நிலை! வழக்கறிஞர் ஆங்கிலத்தில் உரையாடினால், வழக்கில் சம்மந்தப்பட்ட பாமரனுக்கு அது எப்படி புரியும். மக்கள் பேசும் மொழியிலேயே வாதாட வேண்டும்.
நாம் எல்லோரும் உரக்கக் குரல் கொடுக்க வேண்டும். இது போன்று தமிழ் உணர்வு ஏற்படுத்துகின்றது இந்நூல். இது தான் நூலின் வெற்றி. கவிஞர் சு.வெங்கடேசன் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு வித்திடும் ஆய்வு நூலாக வழங்கி உள்ள தரத்திற்குப்
பாராட்டுக்கள்.

கருத்துகள்