நூல் ஆசிரியர் : வித்தகக் கவிஞர் பா.விஜய்
இலங்கையில் நடந்த படுகொலைகள் கண்டு கொதிக்காத கவிஞன் இல்லை. கொதிக்காதவன் கவிஞனே இல்லை. வித்தகக் கவிஞர் பா.விஜய் கொதித்து எழுந்து சமர் என்ற கவிதை நூலை எழுதி உள்ளார். இலங்கைப் படுகொலையை கண்டணம் செய்து தனிநூலாக வந்துள்ள முதல் நூல் என்று கருதுகின்றேன். எல்லாக் கவிஞர்களும் ஒரு சில கவிதைகள் எழுதினார்கள். நானும் எழுதினேன். 64 பக்க முழு நூலாக வந்து இருக்கும் சமர் நூல் படிக்கும். வாசகர்களிடையே மனப்போராட்டம் வந்து விடுகின்றது. கூப்பிடு தொலைவில் தடுக்க முடியாத குற்றவாளிகள் ஆகி விட்டோமே என மனசாட்சி நம்மைக் குத்துகின்றது. வாசகர் உள்ளத்தில் சமர் புரியும் கவிதைகள். ரத்தத்தை சூடாக்கும் கவிதைகள்.
உண்மையான புகைப்படங்களை அழகிய வண்ணத்தில் பயன்படுத்தி கவிதை பிரசுரம் செய்து இருப்பது படிக்கும் போது கவிதை வரிகளும்,புகைப்படங்களும் அந்தக் கொடூர நிகழ்வுகளை நம் மனக்கண்முன் கொண்டு வந்து விடுகின்றது. வித்தகக் கவிஞர் நிறைய கவிதை நூல்கள் எழுதி உள்ளார். ஆனால் இந்த நூல் உண்மையை ஒளிவு மறைவு இன்றி சமரசத்திற்கு இடமின்றி அப்படியே உள்ளத்து உணர்வை பதிவு செய்த காரணத்தால் கொடூர சாவுகளைப் பற்றி பாடிய கவிதைகள் சாகாவரம் பெறுகின்றன. நூலில் உள்ள எல்லாக் கவிதைகளும் உள்ளக் குமுறலாக உணர்ச்சிக் கொந்தளிப்பாக உள்ளது. இந்த நூலை புலம் பெயர்ந்த தமிழர்கள் அனைவரும் அவசியம் படிக்க வேண்டும். ஈழத்தமிழர்களின் காயத்திற்கு மருந்தாக உள்ளது கவிதைகள்.பானை சோற்றுக்கு பதச்சோறாக சில கவிதைகள் உங்கள் பார்வைக்கு.
வீடுகளின் மீது விமானக் கணைகளும்,
பள்ளிகளின் மீத பாஸ்பரஸ் குண்டுகளும்
விழுந்தபோது தான் தெரிந்தது இராணுவம் கொல்ல நினைத்தது
புலிகளை அல்ல பூக்கள்
இந்தக் கவிதை படித்த போது செஞ்சோலைச் சிறார்கள் மீது, மொட்டுகள் மீது எரிமலையை கொட்டிய கொடுமை நினைவிற்கு வந்தது.
பூட்ஸ் கால்கள் நசுக்கிய
மர்மப் பகுதிகள் கத்தின
இறைவா நீ செத்துத் தொலை
இந்தக் கவிதையைப் படித்த போது தான் வணங்கிய கடவுள் தன்னைக் காக்க வரவில்லை என்ற கோபத்தில், இறைவா நீ செத்துத் தொலை என்று சாபம் இடுகின்றான். புலம் பெயர்ந்த தமிழர்கள், சென்ற நாடுகள் எல்லாம்,போட்டி போட்டு கோயில்கள் கட்டி இறைவனை வணங்கினார்கள்.எந்த இறைவனும் ஈழத் தமிழனைக் காக்க முன்வரவில்லை. கடவுள் இல்லை என்று சொல்லவில்லை,இருந்திருந்தால் நல்லா இருந்திருக்கும் எனும் தசாவதாரம் திரைப்பட வசனம் நினைவிற்கு வந்தது.
இராணுவச் சட்டை போட்டவனும் அடிக்கிறான்
காக்கிச் சட்டை போட்டவனும் அடிக்கிறான்
வெள்ளைச் சட்டை போட்டவனும் அடிக்கிறான்
அடிவாங்குபவன் ஒருவனே
அடிப்பவன் தான் வேறு வேறு
இருவர் சண்டையிடுவதை விலக்கி விடச் சென்றவனும் சேர்ந்து ஒருவனை அடித்த கதை என் நினைவிற்கு வந்தது. இங்கே வெள்ளைச் சட்டை என்பது இந்திய அமைதிப்படை என்றே பொருள் கொள்ள வேண்டும்.
இலங்கையின் சிங்கள இராணுவத்தைப் பார்த்து வித்தகக் கவிஞர் பா.விஜய் கேட்கும் கேள்வி.
இன்னும் உன் துப்பாக்கி முனைகளால்
எத்தனை கருப்பைகளை குதறப் போகிறாய்?
நாவுகள் தொங்க பிணங்களை அறுக்கும்
போஸ்மார்ட் போக்கிரிகளுக்கு ஏன் இராணுவ உடை
எத்தனையோ போராட்டங்கள், இலட்சக்கணக்கான் மின்னஞ்சல்கள்,அனைத்திற்கும் மௌனமாக இருந்த ஐ.நா.மன்றத்தை துணிவுடன் சாடுகின்றார் கவிதையில்.
ஒருவன் ஒருவனைக் கொன்றால் ஆயுள் தண்டனை
ஒருவன் பலரைக் கொன்றால் மரண தண்டனை
ஒரு இனத்தைக் கொன்றதற்கு
ஐ.நா.சபை வரை மௌன விரதம்
வாழ்க! உலக மனிதநேயப் புண்ணாக்கு!.
கட்டபொம்மனுக்கு ஒரு எட்டப்பன் போல காட்டிக் கொடுத்த ஈழத்து கருணா பற்றியும் ஒரு கவிதை உள்ளது.
எதிரிகள் அவர்களது துப்பாக்கியால் கொன்றார்கள்
உறவினரை நாம் துரோகத்தினால் வீழ்த்தினோம்.
ஏதிரிகளை விட மன்னிக்க முடியாதவர்கள் துரோகிகள்.
ஈழப்படுகொலைக்கு துரோகி கருணாவும் ஒரு காரணம். காட்டிக் கொடுத்ததற்கு பரிசாக மந்திரி பதவியை பிச்சையாகப் பெற்று உள்ளான்.
கௌதம புத்தனின் சிலையருகே தெரித்தது இரத்தம்
புத்தம் சரணம் இரத்த சாமி
கருணையில்லர் உலகில் பிறந்து விட
என்ன செய்தது பிஞ்சு மரணம்
பூச்சிகளைக் கூட மிதித்து விடக்கூடாது என்று கூட்டி விட்டு நடக்கும் புத்த பிட்சுகள் கூட இந்தக் கொடூரக் கொலைகளை கண்டிக்காதது புத்தனுக்கு இழைத்த துரோகம்.
இப்படி ஒரு கவிதை எழுத நெஞ்சுரம் வேண்டும் கவிஞனுக்கு.
ராஜபக்ஷே எனும் ரத்தம் குடிக்கும் பேயின்
இறுதி ஊர்வலம் தான் இரண்டாம் தீபாவளியென
உலகம் அறிவிக்கட்டும்.
இந்தக் கவிதையைப் படித்ததும் தீபாவளியே கொண்டாடாத என் போன்ற பகுத்தறிவு-வாதிகள் முதல் தீபாவளி கொண்டாட ஆவலோடு காத்து இருக்கிறோம். அந்த நாள் வரும்.
அவன் கடவுள் மாதிரி இருக்கிறான் என்றாலும்
இல்லை தான் என்றாலும் இருந்து கொண்டே தான்
இருக்கும் அவன் மீதொரு பயமும் பக்தியும் !
உண்மையிலும் உண்மை, சிங்களனுக்கு பயம் இன்றும் உள்ளது. தமிழனுக்கு வீரன் மீது பக்தி உள்ளது.
உலக நாடுகள் ஊமையானதும்
இந்திய தேசம் அமைதியானதும்
இருபத்தோராம் நூற்றாண்டின்
உச்சகட்ட அவமானம்
இப்படி நூல் முழுவதும் ஈழத்தில் நடந்த கொடூரங்களுக்கு கண்டனத்தை உரக்கப் பதிவு செய்த இனிய நண்பர் வித்தகக் கவிஞர் அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
கருத்துகள்
கருத்துரையிடுக