நூலின் பெயர் : நையப்புடை,நூல் விமர்சனம் : கவிஞர் இரா.ரவி
நூல் ஆசிரியர் : கவிஞர் பவகணேஷ்
நூல் ஆசிரியர் கவிஞர் பவகணேஷ் இந்நூலை மறக்காமல் தன் பள்ளித் தமிழாசிரியர் திரு.சரவணன் அவர்களுக்கு காணிக்கையாக்கி உள்ளார். இலக்கியப் பயணத்திற்கு துணை நின்றவர்களையும் மறக்காமல் குறிப்பிட்டு நன்றி பாராட்டி உள்ளார். கவிஞர்கள் மயிலாடுதுறை இளையபாரதி,கன்னிக் கோயில் இராஜா,வசீகரன் ஆகியோரின் அணிந்துரை நூலிற்கு அழகு சேர்க்கின்றது. நூலின் அட்டைப்படமே கருப்பு வெள்ளையில் வித்தியாசமாக உள்ளது.
குழந்தைகள் இன்று,”வீடியோ கேம்ஸ்” காரணமாக வன்முறையாளர்களாக மாறி வருகிறார்கள் என்பதை கவிதையில் பதிவு செய்துள்ளார்.
ஆழகு பூக்கும் தலைமுறை
துப்பாக்கிச் சூடு அய்ந்து புள்ளி கத்திக்குத்து பத்துப்புள்ளி
வெறும் வன்முறை கொண்டு வடிவமைத்து பொத்தான் அழுத்தி
எண்ணிக்கை அடங்கா “வீடியோ கேம்ஸ்”-ஸின் ஆக்கிரமிப்பு
இன்றைய குழந்தைகள் உலகம்.
பிஞ்சு நெஞ்சங்களில் வன்முறை நஞ்சு பதிக்கும் முறைகளுக்கு முடிவு கட்ட வேண்டும் என்ற வழிப்புணர்வை விதைக்கின்றனர். சமுதாயத்தின் மீதான அக்கறை தான் இந்தக் கவிதை நூல். இன்றைய கல்வியின் நிலையை மிக நுட்பமாக புதுக்கவிதையில் பதிவு செய்துள்ளார்.
திறக்கும் வான்வெளி
சுயஅறிவு மழுங்கடிக்கும் மனப்பாட மதிப்பெண்கள்
புத்தகப் பக்கங்களை ஊடே
எங்களை மடித்து வைத்து
எழுத்துக்களுடன் இடைவெளி சேர்த்து
அச்சு பிசகாமல் மனனம் செய்து
யோசிக்கும் சுயதிறன் இல்லாமல் செய்தது இக்கல்வி
தமிழ் கல்லாமல் ஆங்கிலம் ? திகட்டும் பால்
தமிழ் படிக்காமலே பட்டம் பெறும் அவல நிலை தமிழகத்தைத் தவிர வேறு எந்த மாநிலத்திலும் இல்லை. இந்நிலை மாற வேண்டும்.
சுற்றுச்சூழல் மாசு விழிப்புணர்வு என்பது காலத்தின் கட்டாயம். அதையும் கவிஞர் புதுக்கவிதைகளில் பதிவு செய்துள்ளார்.
புகையில்லா பூமி சமை
புகைபுகை – திசைதோறும் புகை-வாகனப்புகை – ஆலைப்புகை
சிகரெட்புகை – அணுகுண்டுபுகை – பூமிச்சூட்டுப் புகை
புகை வாழ்வு எரிப்பது உணர்
புகையைக் குறைத்து பூமி செழிக்க அவைகளும் ஒத்துழைக்க வேண்டிய அவசியத்;தை உணர்த்துகின்றார் நூலாசிரியர் கவிஞர் பவகணேஷ்
மக்கள் வரிப்பணத்தில் நடக்கும் மக்களவையில் மக்களுக்கு பயன்படும் பொருள் பற்றி பேசாமல் கூச்சல்,குழப்பம்,சண்டை செய்து,சபை ஒத்தி வைப்பு செய்யும் அவலத்திற்கு
கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். அரசியல்வாதிகள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஒருவர் வாழ்வு எப்போது அர்த்தப்படும் என்பதைப் பதிவு செய்துள்ளார்.,
எதிர்காலம் மீட்கும் அட்சயம் பாத்திரம்
ஒரு சேதி நமக்கு – அநாவசிய செலவுகள் நீக்கு
ஆதரவு குடை விரி – நம்பிக்கை பேசு
சேவைக்குக் கை கொடு – அர்த்தப்படும் வாழ்வு
காவலர்களில் சிலர் கறுப்பு ஆடுகளாக, ரௌடிகளாக இருப்பதை கவிதையில் சுட்டி உள்ளார். காவல்hகள் கண்ணியமிக்கவர்களாக மாற்ற வேண்டும் என்பது நூலாசிரியர் ஆசை அன்று நகைச்சுவை மிகத் தரமாக இருந்தது. நகைச்சுவை என்பது அடுத்தவர் மனதை புண்படுத்தாத நகைச்சுவையாக இருக்க வேண்டும். மதிக்கப்பட வேண்டிய மாற்றுத்திறனாளிகளையும், திருநங்கைகளையும் கேலி செய்து நகைச்சுவைக் காட்சிகள் ஒளிப்பரப்புவதற்கு கண்டனத்தை உரக்கப் பதிவு செய்துள்ளார். நூலின் பெயருக்கு ஏற்றபடி சமூக விரோதிகளை நையப்புடைத்து உள்ளார்.
ஆயுள் அழிக்கும் நகைச்சுவைகள்
நகைச்சுவை பெயர் சொல்லி ஊடகம் நிகழ்த்தும் சமூகச் சீர்கேடு
அரங்கேறும் அருவருப்பு,இரட்டை அர்த்த வசனம் பேசி
உயிர்கள் உறவுகள் சாகடித்து, பெண்மையைக் கொச்சை செய்து
பாலியல் சீண்டல் பகிரங்கப்படுத்தி அடித்து உதைத்து
பின்னணி சிரிப்புச் சத்தம் போட்டு நகைச்சுவை மகத்துவம் கெடுக்கும் போட்டி.
இன்று பரவி வரும் மூட நம்பிக்கைகளை பதிவு செய்து உள்ளார். செல்லிடப் பேசியிலும் பலர் கடவுள் பற்றி தகவல் அனுப்பி,இதை பத்து பேருக்கு அனுப்பாவிட்டால் துன்பப்படுவாய் என அச்சுறுத்தும் அவலத்தைச் தோலூரித்துக் காட்டுகிறார். அண்டை மாநிலங்கள் தமிழகத்திற்கு செய்து வரும் அநீதையைத் தட்டிக் கேட்கிறார். கவிதையால்.
சுவர் உடைக்கும் சகோதரம்
பூட்டிக்கிடக்கும் நதிகள் தமிழகம் தொலைக்கும் நீர்ச்சுவடுகள்
எத்தனைப் பேச்சுவார்த்தைகள் தற்கொலை நாடகம் அங்கு அரங்கேற்றம்
அணை உடையும் நிலையில் மட்டும் திறந்து விடும் சுய நலம்
பாய்ந்து வரும் நதிகள் தடுத்து அமுக்கி
நுரைப்பொங்கும் அண்டை மாநிலம்
நத்தைக்கறி எலிக்கறி தின்று உயிர் நகர்த்தி
நுரைக்கக்கும் எங்கள் விவசாயிகள்
இந்தியாவின் மூன்று பக்கம் உப்புநீர்
தமிழகத்தின் மூன்று பக்கம் முடமாக்கப்பட்ட நதிகள்
உணர்வும் அரசம் ஒருசேர திறந்தால் செழிப்போம் நாம்
கர்நாடகாவில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய போதும் தண்ணீரைத் தர மறுக்கிறார்கள். வெள்ளம் வரும் காலத்தில் மட்டும் தற்காத்துக் கொள்ள அனுப்புகிறார்கள். கடலில் வீணாய் கலக்கும் நீரை முல்லைப் பெரியாற்றில் சேமிக்க மறுக்கும் கேரளம். பாலாற்றின் குறுக்கே அணை கட்டத் துடிக்கும் ஆந்திரம், இப்படி போட்டு போட்டு அண்டைமாநிலங்கள் தமிழகத்திற்கு துரோகம் செய்து வருகின்றன. தட்டிக் கேட்க நாதியின்றி வாழும் தமிழன்,வேடிக்கை பார்க்கும் மைய அரசு, வேதனையில் விவசாயிகள்.
கவிதை என்ற பெயரில் மானே,தேனே, மயிலே,குயிலே,நிலமே,தென்றலே, என இயற்கையைப் பாடிடும் சராசரிக் கவிஞனாக இல்லாமல்,சமுதாய அவலத்தை தோலூரித்துக் காட்டி,நையப்புடைத்த கவிஞர் பவகணேஷ்-க்கு பாராட்டுக்கள்.
கருத்துகள்
கருத்துரையிடுக