ஞாயிறு, 18 ஜூலை, 2010

பாரதிதாசன் , நூல் விமர்சனம் : கவிஞர் இரா.இரவி

era.jpg
பாரதிதாசன் , நூல் விமர்சனம் : கவிஞர் இரா.இரவி


நூல் ஆசிரியர் : திருவேணு சீனிவாசன்


புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் வரலாற்றை அறிய கையடக்க நூலாக புரொடிஜி பதிப்பகம் வெளியிட்டுள்ளது. நூலின் அட்டையில் கம்பீரமான புரட்சிக்கவிஞரின் புகைப்படழும், "தன் உயிரை விடவும்,தமிழை அதிகமாக நேசித்தவர் பாரதிதாசன். ஒரு புரட்சிக்கவிஞரின் புதுமையான வாழ்க்கைக் கதை" என்ற வைர வரிகளும் உள்ளது.

புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் 1891-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 29-ம் நாள் இரவு 10.15 மணிக்கு புதுச்சேரியில் பிறந்தார் என்ற தகவல் தொடங்கி 1964-ம் ஆண்டு ஏப்ரல் 21-ம் நாள் அவர் இந்த மண்ணுலகை விட்டு மறைந்தார் என்ற செய்தி வரை வரலாற்றை மிக நுட்பமாகவும், சுருக்கமாகவும், ஆழமாகவும் நன்கு பதிவு செய்துள்ளார் நூலாசிரியர் திரு.வேணு சீனிவாசன். மகாகவி பாரதியைப் போல புரட்சிக் கவிஞர் பாரதிதாசனும் சிறு வயதிலேயே கவிதை படைக்கும் ஆற்றல் பெற்று இருந்தார் என்ற புதிய செய்தி உள்ளது. புரட்சிக்கவிஞர் பன்னிரண்டாவது வயதிலேயே திருக்குறள் முழுவதும் மனப்பாடமாகத் தெரிந்து வைத்து இருந்தார். அதனால் தான் அவரால் புரட்சிக்கவிஞராக உயர முடிந்தது என்பதை உணர முடிகின்றது.

பாவேந்தர் குடும்பம் பற்றியும் நூலில் அறிய முடிகின்றது. தந்தை கனகசபை, தாயார் லெட்சுமி அம்மாள், மனைவி பழனியம்மாள், நான்கு குழந்தைகள் மூத்த பெண் சரஸ்வதி, இரண்டாவது மகன் கோபதி(இவரே பிற்காலத்தில் மன்னர் மன்னன் என்று பெயர் சூட்டிக் கொண்டார்) மூன்றாவது பெண் வசந்தா, நான்காவது பெண் ரமணி, பாவேந்தர் கண்டிப்பு மிக்க தந்தை. அதே நேரத்தில் கரையில்லாத அன்புக்கடலும் அவரே தான்.

பட்டுக்கோட்டை அழகிரிசாமி வரா,குத்தூசி குருசாமி, ப.சுவானந்தம் என்று பல அறிஞர்கள் புதுச்சேரியில் இருந்த பாவேந்தர் இல்லம் வந்து செல்வார்கள். தாலாட்டுப் பாடலை புதுமையாக படைத்தார்.

சோலை மலரே, சுவர்ணத்தின் வார்ப்படமே
காலையிளஞ் சூரியனைக் காட்டும் பளிங்குருவே

என்ற தாலாட்டுப் பாடலை அந்த நொடியே பாடித் தந்தார். மகாகவி பாரதி சந்திப்பு, தந்தை பெரியாருடன் சந்திப்பு, புதிய ஆத்திச்சூடி படைத்தல் இப்படி வாழ்வில் நடந்த சுவையான நிகழ்வுகளை சுவைபட தொகுத்து உள்ளார்.

அனைவரும் உறவினர்
ஆட்சியைப் பொதுமை செய்
ஈதல் இன்பம்
இப்படி பல அறிவுரைகளுடன் இருந்தது புதிய ஆத்திச்சூடி.
வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயே
மாண்புகள் நீயே செந்தமிழ்த் தாயே

என்ற பாடலை எழுதினார். இந்தப் பாடல் புதுவை அரசின் தமிழ்த்தாய் வாழ்த்தாக இன்றும் பாடப்படுகிறது.

இது போன்ற பல்வேறு தகவல்களின் சுரங்கமாக நூல் உள்ளது. பாரதிதாசன் பற்றிய புரிதலை உண்டாக்கும் நல்ல நூல். புரட்சிக்கவிஞரின் அப்பா கனகசபை, இயற்பெயர் சுப்புரத்தினம் - கனக சுப்புரத்தினம் என்று அழைத்தனர். பாரதிதாசன் என்று புனைப்பெயர் சூட்டிக் கொண்டதற்காக காரணத்தை அவரே சொல்கிறார், இதோ!

"பாரதியாரை நான் ஆதரித்ததும், பாரதிதாசன் என்ற புனைப்பெயர் வைத்துக் கொண்டதும், ஏதோ ஒரு கூட்டத்தாரிடம் நன்மை கிடைக்குமா என்று எதிர்பார்த்து அல்ல. சாதி ஒழிப்பு விளம்பரம் ஆதல் வேண்டும் என்பதற்காகவும், பாரதியாரைப் போல எளிய நடையில் மக்களுக்கு இன்றைக்கும் வேண்டிய கருத்தை வைத்து பாடல் இயற்ற வேண்டும் என்பதை புலவர்க்கு நினைவூட்ட வேண்டும் என்பதற்காகவும் தான்".

இந்நூலை படித்து முடித்த பின்பு தான் எனக்கு பாரதிதாசன் - புனைப்பெயர் காரணம் புரிந்தது. பாரதிதாசன் படைப்புகளின் பட்டியல் உள்ளது. ~~மயிலும், ஸ்ரீ சுப்ரமணியர் துதியமிது|| என்ற படைப்பு பகுத்தறிவாளர் ஆகும் முன்பு படைத்தது. கதர் இராட்டினப் பாட்டு, சஞ்சீவி பர்வதத்தின் சாரல், சுயமரியாதைச் சுடர், புரட்சிக்கவி, பாரதிதாசன் கவிதைகள் தொகுதி ஒன்று, இரணியன் அல்லது இணையற்ற வீரன், எதிர்பாராத முத்தம், குடும்ப விளக்கு, பாண்டியன் பரிசு, இருண்ட வீடு இப்படி காலத்தால் அழியாத படைப்புகளைத் தந்து இன்றும் படைப்புகளால் நம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கும் புரட்சிக் கவிஞரின் வரலாற்றை பறைசாற்றும் நூல்.

எழுதியபடி வாழ்ந்தவர், அவர் சந்தித்த போராட்டங்கள், எதிர்ப்புகள், கண்டனங்கள், பெற்ற பரிசுகள் என பாவேந்தரின் வாழ்க்கையை பொய்யான புகழ் உரை எதுவும் இன்றி மிகவும் இயல்பான மொழியில் நன்கு பதிவு செய்துள்ளார் நூலாசிரியர். அறியாமையில் உறங்கிக் கிடந்த சமுதாயத்தை தனது கவிதைகள் மூலம் தட்டி எழுப்பிய அறிவுச் சூரியன் பாரதிதாசன். பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் கொள்கைப் போர் முரசு பாவேந்தர் வரலாறு படித்து முடித்த பின்பும் நம் உள்ளத்தில் வந்து போகிறார். அது தான் இந்த நூலின் வெற்றி.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக