அறிஞர் அண்ணா , நூல்விமர்சனம் : கவிஞர் இரா.இரவி

  • Pict0002.JPG

அறிஞர் அண்ணா , நூல்விமர்சனம் : கவிஞர் இரா.இரவி


நூல் ஆசிரியர்
:: திரு.என்.சொக்கன்

அறிஞர் அண்ணாவின் வாழ்கைக் கதை நிச்சியம் நம்மை ஒரு வெற்றியாளராக மாற்றி அமைக்கும் என்பது முற்றிலும் உண்மை. நூல் அறிவால் அகிலம் போற்றும் அறிஞர் ஆனவர் அண்ணா.

1909-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15-ம் தேதி காஞ்சிபுரத்தில் ஒரு சாதாரணமான நெசவாளர் குடும்பத்தில் பிறந்தார். அண்ணாத்துரை சுருக்கமாக அண்ணா என்று தொடங்கி,�எதையும் தாங்கும் இதயம் இங்கே உறங்குகிறது� எனும் வரிகள் பொறிக்கப்பட்டுள்ள மெரினா கடற்கரையில் உள்ள அறிஞர் அண்ணா சமாதி வரை அவரது வாழ்வில் நடந்த சுவையான நிகழ்வுகளின் தொகுப்பாக வந்துள்ளது நூல். நூலாசிரியர் திரு.என். சொக்கன் அறிஞர் அண்ணாவை, நன்கு உள்வாங்கி ஆய்ந்து, அறிந்து,தேர்ந்து நல்ல நூலாக வடித்துள்ளார்.

பகுத்தறிவுப் பாதையில் வெற்றிக்கொடி நாட்டிய அறிஞர் அண்ணா, குழந்தைப் பருவத்தில் நீண்ட ஜடை, காதில் கடுக்கண், நெற்றியில் நாமம் என்று அண்ணாவுக்குப் பெற்றோர் பெண் குழந்தையைப் போல அலங்காரம் செய்து அழகு பார்த்தார்கள் என்ற தகவல் படிக்கச் சுவையாக இருந்தது. சிறுவயதில் அசைவம் சாப்பிட்டு பின்னர் பெரியவர் ஒருவர் உரை கேட்டு சைவத்திற்கு மாறியது புதிய தகவல்.

அரிச்சந்திரன் நாடகம் எழுதி, மாட்டுக் கொட்டகையில் அரங்கேற்றினார் அண்ணா. சாதாரண அண்ணா, அறிஞர் அண்ணாவாக மாறிய ரகசியம் படிப்பு, படிப்பு, படிப்பு. அவர், பாடப்புத்தகங்கள் மட்டுமின்றி, வீட்டில் முறுக்கு,கடலை பட்சணம் வாங்கிவரும் காகிதங்களைக் கூட விட்டு வைக்க மாட்;டார். எந்நேரமும் அவருக்கு எதையாவது படித்துக் கொண்டே இருக்க வேண்டும். புத்தகம் வாசிப்பை அவர் சுவாசிப்பாகக் கருதியதால், வாழ்வில் வென்றார், மக்கள் மனங்களில் நின்றார், நினைவாற்றல் மிக்கவர் அண்ணா.

பல தலைமுறைகளாக தமிழர்கள் அடங்கியே வாழ்கிறார்கள் என்று வருந்தியவர் பெரியார். தமிழர்களுக்குள் அடிமை உணர்வு தாழ்வு மனப்பான்மை அதிகமாகி விட்டது என்று நம்பிய அவர். அவர்களுக்குச் சுயமரியாதை எண்ணத்தை ஊட்டுவதற்காக சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கினார். பெரியாரின் சீடராகத் தொடங்கி, முதல்வர் என்ற சிகரம் தொட்ட வரலாறு நூலில் மிக நுட்பமாகவும்,ரசிக்கும்படியும் பதிவு செய்துள்ளார். அறிஞர் அண்ணா, மாணவராக இருக்கும் போது மற்ற மாணவர்களைப் போல பாடப்புத்தகத்தில் உள்ளது போல அப்படியே எழுதாமல், படித்துப் புரிந்து கொண்டு தனது சொந்தநடையில் எழுதி அதிக மதிப்பெண்களையும், பாராட்டையும் பெற்றார். அண்ணாவின் கட்டுரையைப் பார்த்து ஆசிரியர் ஆச்சிரியம் அடைந்தார். பொய் சொல்லாதே? நீயே எழுதியதா? இந்தக் கட்டுரை, ஒரு மாணவனால் இவ்வளவு சிறப்பாக எழுத முடியுமா ? என வியந்தார்.

மாணவப் பருவத்தில் தொடங்கிய எழுத்துப்பணி பன்முக ஆற்றலாளராக அவரை வளர்த்து எடுத்தது. எழுத்தில் மட்டுமல்ல பேச்சிலும் முத்திரை பதித்தவர் அறிஞர் அண்ணா. மக்களோடு மக்களாக வாழ்ந்தவர். எதிரிகளும் பாராட்டும் வண்ணம் நேர்மையாக வாழ்ந்தவர். மிகச்சிறந்த பண்பாளர், ஒழுக்க நெறியாளர், தனி மனித ஒழுக்கத்தில் சிறந்து விளங்கியவர்.

இராஜாஜியின் ஆட்சியின் போது, இந்தி எதிர்ப்புப் போராட்டம், அண்ணாவிற்கு 4 மாத சிறை தண்டனை, பெரியாருடன் சிறை செல்வதை பெருமையாக கருதினார். சமூக அக்கறையோடு பொது வாழ்க்கையில் ஈடுபட முன் வந்தது. தனக்குச் சரி என்று தோன்றுகிற ஒரு கருத்தை, யாருக்காவும், எக்காரணத்துக்காகவும், மாற்றிக் கொள்ள மாட்டார் அண்ணா. இப்படி பல தகவல்கள் அறிஞர் அண்ணா பற்றி நிறைய உள்ளது. காலத்தால் அழியாத பல பொன்மொழிகளை வழங்கியவர் அறிஞர் அண்ணா.

தந்தை பெரியாருடன் ஏற்பட்ட சிறிய கருத்து வேறுபாடு காரணமாக உதயமான கட்சிக்கு திராவிட முன்னேற்றக் கழகம், சுருக்கமாக தி.மு.க என்று உருவானது. தந்தை பெரியார், மணியம்மையாரை மணம் முடித்ததும், கட்சி வாரிசு அரசியாகிறது, அது கூடாது என்று தான் தி.மு.க-வை ஆரம்பித்தார். ஆனால் தி.மு.க �விலும் வாரிசு அரசியல் வரும் என்பதை அறிஞர் அண்ணா அன்று உணரவில்லை. உணர்ந்திருந்தால் பெரியாரிடமே இருந்திருப்பார்.

கடமை,கண்ணியம், கட்டுப்பாடு மூன்றையும் எந்தச் சூழ்நிலையிலும் கைவிட்டு விடக் கூடாது என்;று தம்பிகளுக்கு கட்டளைகளை வகுத்தளித்தார் அண்ணா. ஆனால் இன்று திராவிடக் கட்சிகள் கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டை பல நேரங்களில் மறந்து விடுகின்றனர். தி.மு.க. தேர்தலில் போட்டியிட வேண்டுமா? கூடாதா? என்ற கருத்துக் கணிப்பு நடத்தி, தேர்தல் நடத்தி கொள்கை முடிவெடுத்தார் அறிஞர் அண்ணா. ஆனால் இன்று தேர்தலே பணம் கொடுத்து வாக்குப் பெறும் அவல நிலைக்கு வந்து விட்டது. தேர்தல் இன்று கேலிக்கூத்தாகி விட்டது.

தேர்தலில் ஆரம்பத்திற்கு தி.மு.கவிற்கு கிடைத்தது 15 தான் என்று கேலி செய்யப்பட்டார் அறிஞர் அண்ணா. 1967 தேர்தலில் 138 இடங்களில் வெற்றி பெறக் காரணம் அறிஞர் அண்ணாவின் அயராத உழைப்பு. அரசியலில் நேர்மை, நாணயம், ஒழுக்கத்தோடு வாழ்ந்தவர் அறிஞர் அண்ணா.

காங்கிரஸ் இயக்கத்தை தமிழகத்திலிருந்து அப்புறப்படுத்திய பெருமை அறிஞர் அண்ணாவையே சாரும். இன்று வரை தனித்து நின்று காங்கிரசால் வெற்றி பெற முடியாத நிலை தொடருகின்றது என்றால் அது அறிஞர் அண்ணாவின் கடின உழைப்பு. அறிஞர் அண்ணா உருவத்தில் சற்று குள்ளமானவராக இருந்தாலும், உள்ளத்தால் உயர்ந்தவர். மாற்றுக்கருத்து உடையவர்களையும் மதிக்கும் பண்பாளர். அவருடைய எழுச்சி வரலாறு படித்ததும், நம் இதய சிம்மாசனத்தில் அமர்ந்து விடுகிறார் அறிஞர் அண்ணா.

கருத்துகள்