கவிஞர் இரா.இரவியுடன் நேர்முகம்



கேள்விகள் : எழுத்தாளர் முல்லை அமுதன்


1.உங்கள் எழுத்துலக பிரவேசம் பற்றிச் சொல்லுங்கள் ?
எனது கவிதைகளை பிரபல இதழ்கள் ஏற்கவில்லை, மதுரையில் மதுரை மணி என்ற நாளிதழில் சனிக்கிழமை தோறும் மணிமலர் என்ற இலவச இணைப்பில் எனது முதல் கவிதை பிரசுரமானது. எனது கவிதைகளை அச்சில் கண்ட மகிழ்ச்சியில் தொடர்ந்து எழுதினேன். சிற்றிதழ்களிலேயே தொடர்ந்து எழுதி வருகின்றேன்.


2.உங்களின் ஆகாஷ் கவிஞர் யார் ?


தனது கவிதைகளின் மூலம் தமிழ்ப்பற்றும், தமிழ்இனப் பற்றும், பகுத்தறிவும் ஊட்டிய புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் தான் என் ஆகாஷ் கவிஞர்.


3.மின்னம்பல எழுத்து வடிவங்கள் வந்தபின் உங்கள் நூல் வடிவமாக்கல் முயற்சிகளில் பாதிப்பு ஏற்படுத்தியுள்ளதா ?


8 நூல்கள் எழுதி உள்ளேன். 8 கவிதைகளையும் எனது கவிமலர் டாட்காம் இணையத்தில் பதிப்பித்து உள்ளேன். இணையத்தில் கவிதைகளை பதிப்பித்து விட்டால் நூல்கள் விற்காது என்ற கருத்து உண்மை இல்லை. எனது நூல்கள் யாவும் விற்று தீர்ந்து விட்டன. மறுபதிப்பு அச்சிட வேண்டும். இணையத்தில் வாசிக்கும் வாசகர்கள் வேறு, நூல்கள் வாசிக்கும் வாசகர்கள் வேறு. நூல்களுக்கு விளம்பரமாகவே இணையங்கள் உள்ளது. இணையத்தைக் கண்டு பயந்து, நூல் வெளியிடாமல் இருப்பது தவறு. எனது அடுத்த நூல், மனதில் ஹைக்கூ அச்சுப் பணி நடந்து வருகின்றது.


4.பெண்ணியம் பற்றி ?


பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் கொள்கைகளில் எனக்கு அதிக ஈடுபாடு உண்டு. எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை. அவர் எழுதிய பெண் ஏன் ? அடிமையானாள் என்ற நூலை படித்து இருக்கிறேன். இந்த நூலை எல்லாப் பெண்களும் படிக்க வேண்டும், ஆணாதிக்க சிந்தனை உள்ள ஆண்களும் படிக்க வேண்டும். தாய்நாடு என்கிறோம், ஆறுகளுக்கும், கடவுள்களுக்கும் பெண்கள் பெயரைச் சூட்டி விட்டு, பெண்களை போகப் பொருளாக ஜடப் பொருளாக சித்தகரிக்கும் போக்கை ஒழிக்க வேண்டும். பெண்ணை சக மனுசியாக மதித்து, அவள் உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்க வேண்டும்.


5.தங்களின் கவிமலர் இணையதளம் பற்றி புதிய வாசகர்களுக்காகச் சொல்லுங்கள்.
என்னுடைய கவிதை நூல்கள் 1000 பேரிடம் சென்று அடைய 2 வருடங்கள் ஆனது. எனது கருத்து பரவலாக எல்லோரிடமும் விரைவாக சென்றடைய என்ன ? வழி என்று யோசித்தேன். 2003-ல் கவிமலர் இணையம் தொடங்கினேன். சில வருடங்கள் கழித்து, பார்வையாளர்கள் எண்ணிக்கை காட்டும் வசதியை இணைத்தேன். இன்று வரை 4,25,000 பேருக்கு மேல் பார்த்து பாராட்டி உள்ளனர். பலர் விருந்தினர் புத்தகத்தில் தங்கள் கருத்தை பதிவு செய்துள்ளனர். கவிதைகளை முழுமையாக பதிப்பித்தேன். எழுத்துப் பிரச்சனைகள் இன்றி, எந்தக் கணினியிலும் தெரியும் வண்ணம் புகைப்படம் போன்ற எழுத்துக்களை பதிப்பித்தன் காரணமாகவே எந்தவித சிரமமின்றி எளிதாக எல்லோரும் பார்த்தார்கள். பிரபல இணையங்கள் யாவும் கவிமலருக்கு இலவச இணைப்பு வழங்கி உள்ளனர். இந்த இணையத்தின் காரணமாகவே என் கவிதையை ஆரம்பத்தில் பிரசுரம் செய்யாத பிரபல இதழ்கள் யாவும் என்னை பேட்டி கண்டு பிரசுரம் செய்தார்கள். தோல்விக்குத் துவளாமல் தொடர்ந்து முயற்சிசெய்து வெற்றி பெற்றால் நம்மை அலட்சியம் செய்தவர்கள் கூட இலட்சியம் செய்வார்கள் என்பதை உணர்ந்தேன்.


6.பாரதிக்குப் பிறகு போர்காலச்; சூழலில் எமது ஈழக்கவிதைகளே வீச்சுடன் வருவதாக புலம் பெயர்ந்த நாம் நினைக்கிறோம், இதை ஏற்றுக் கொள்கிறீர்களா ?


உண்மை, ஏற்றுக் கொள்கிறேன். வலி மிகுந்த புலம் பெயர்ந்த வாழ்க்கையில் தன் வீடு, தன் குடும்பம் என்று சுருங்கி விடாமல் உணர்ச்சி மிக்க பல கவிதைகளை, கதைகளை, கட்டுரைகளை எழுதி, வருமானத்தில் ஒரு பகுதியை தயக்கம் இன்றி செலவு செய்து, தமிழுக்காகம், தமிழருக்காகவும் உரக்கக் குரல் கொடுத்து வருகின்றனர். தமிழ் இன்னும் அழியாமல் இருப்பதற்கு காரணம், புலம் பெயர்ந்த தமிழர்கள் என்றால் மிகையன்று. தங்கக்கூட்டில் அடைத்து வைத்தாலும் கிளி மகிழ்ச்சி அடையாது. சுதந்திரமாக பறக்க வேண்டும் என்றே கிளி விரும்பும். புறவைக்கு இருக்கும் விடுதலை உணர்வு தான் மனிதனுக்கு இருக்கும்.


7.உங்களின் எதிர்காலத் திட்டம் ?


கவிமலர் இணையத்தில் எனது படைப்புகள் மட்டுமே உள்ளது. எதிர்காலத்தில் எல்லோருடைய படைப்புகளையும் பதிப்பிக்கும் மிகப்பெரிய இணையமாக வளர்க்க வேண்டும் என்பதே எனது எதிர்க்காலத் திட்டம்.


8.கலைஞரின் செம்மொழி மாநாடு பற்றிய கருத்து ? கூடவே தமிழ் ஆட்சி மொழியாகாதது வரை செம்மொழி ஆகுமா ?


கலைஞரின் செம்மொழி மாநாடு பற்றிய எனது ஒரே வரி கருத்து இது தான்.


தமிழினம் வீழ்ந்து, தமிழ் வாழ்ந்து என்ன பயன் ?


செம்மொழி என்று அறிவித்ததோடு சரி. மைய அரசு சமஸ்கிருதத்திற்கு செலவிட்டது போல, தமிழுக்கு செலவிடவில்லை. இன்னும் வட இந்தி;ய பல்கலைக் கழகங்களில் தமிழுக்கான இருக்கைகள் தொடங்கப்படவில்லை. இலங்கை, சிங்கப்பூர் போல தமிழை ஆட்சிமொழியாக அறிவிக்கவில்லை, உலகப் பொதுமறையான திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்கத் தயங்கும் மைய அரசு.


9.நிறையவே கவிதைகள், கவிதைகள் பற்றி எழுதுகிறீர்கள் ? தற்போதைய கவிதைகளின் செல்நெறி பற்றிக் கூறுங்களேன்.


கவிதை என்பது மிக உன்னதமான வடிவம். மக்கள் மனதில் எழுச்சியை ஏற்படுத்தும் சிறந்த வடிவம், சிலர் புதுக்கவிதை என்ற பெயரில் ஆங்கிலச் சொற்கள் கலந்து எழுதி வருவதை தவிர்க்க வேண்டும். இன்னும் சிலர் இருண்மை என்று யாருக்கும் புரியாத கவிதை எழுதி வருகிறார்கள். அதுவும் தவிர்க்கப்பட வேண்டும். இன்னும் சிலர் உடல்மொழி என்ற பெயரில் ஆபாசச் சொற்களை பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். படித்தால் படித்த வாசகனுக்கு எளிதில் புரியும் வண்ணம் எளிமையாகவும், இனிமையாகவும் இருத்தல் வேண்டும்.


10.புதிய எழுத்தாளர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள் ?


இந்திரனே, சந்திரனே என ஆள்வேர்க்கு லாலி பாடாதீர்கள். மனதில் பட்டதை துணிவுடன் எடுத்துக் கூறும் படைப்பாக இருக்க வேண்டும். சங்கக்கால புலவர்கள் போல் மன்னர்களுக்கு பணியாதவர்களாக இருக்க வேண்டும். தவறு யார்? செய்தாலும் தட்டிக் கேட்கத் தயங்கக் கூடாது. மக்களை நெறிப்படுத்தும் படைப்புகளை படைக்க வேண்டும். ஆபாச நடை தவிர்க்க வேண்டும். மூட நம்பிக்கைகள் ஒழிக்கவும், பகுத்தறிவை விதைக்கவும் படைக்க வேண்டும். சக மனிதனை மனிதனாக மதிக்கும் மனிதநேயம் கற்பிக்கும் படைப்புகளாக இருக்க வேண்டும்.


11.ஈழப்போர் நான்கின் போர்முகம் மனித அவலம் இனப்படுகொலை புலம் பெயர்ந்த தமிழர் எழுச்சி தமிழக மக்களின் புதிய பாய்ச்சல் ஆகியவற்றால் தங்களின் எழுத்தில் தாக்கம் ஏற்பட்டுள்ளதா?


ஊடகங்கள் எழுதத் தயங்கிய செய்திகள் புகைப்படங்கள் யாவும் இணையத்தில் வெட்ட வெளிச்சமாகி வருகின்றது. இவற்றைக் கண்ட போது நெஞ்சு பொறுக்கவில்லை,கொதித்து எழுந்த உணர்வுகளை கவிதையாக எழுதி வருகிறேன். வெள்ளைக் கொடி ஏந்தி வந்தவர்களையும் சுட்டுக் கொன்ற கொடூரம் உலகில் வேறு எங்கும் நடக்கவில்லை. தமிழைத் தாய்மொழியாக பேசியதற்காக இலட்சக்கணக்கான மக்களை உயிரோடு போட்டு புதைத்த அவலம், முள்வேலியில் இன்னும் அடைத்து வைத்துக் கொண்டு அடிப்படைத் தேவைகளுக்கு அல்லல்பட வைத்துக் கொண்டு உலகம் முழுவதும் நல்லவன் போல வலம் வந்து கோடிகளைத் திரட்டி வரும் கேடியான ராஜபக்சேயை அய்நா மன்றம் உடனடியாகக் கைது செய்து தக்க தண்டனை வழங்க வேண்டும். ராஜபக்சே தண்டிக்கப்படும் நாள் தான் உலகத் தமிழ்த் திருநாள் ஆகும். மாவீரன் முத்துக்குமார் மரணத்தின் ஒளி,தமிழகத்தில் ஈழ ஆதரவு எழுச்சிய+ட்டியது.


11.இயந்திர வாழ்க்கை,குடும்ப உறவு,உங்கள் எழுத்துலகை வளம் படுத்துவதாக உள்ளதா?


எழுத்து என்பது உணவு தராது.ஆனால் உணர்வு தரும்,எழுத்தை முழு நேரமமாகக் கொள்ளாமல் பகுதி நேரமாக வைத்துக் கொண்டு, வாழ்க்கைக்கு,வாழ்வாதாரத்திற்கு உழைப்பும் வேண்டும்,அலுவலகம் வீடு என்று இயந்திரமாக வாழாமல், அதையும் தாண்டி படைப்பு என்பது நம்மை புதுப்பித்துக் கொள்ள உதவும்,புத்துணர்ச்சி தரும்,கோபம் தணிக்கும் மருந்தாக படைப்பாற்றல் அமையும்.



கருத்துகள்