மரம் ! கவிஞர் இரா .இரவி !



மரம் ! கவிஞர் இரா .இரவி !

கெட்ட காற்றை உள்வாங்கி நல்ல காற்றை வெளியிடும் மரம்
நல்ல காற்றை உள்வாங்கி கெட்டகாற்றை வெளியிடுபவன் மனிதன் !

கழிவுநீரை உள்வாங்கி நல்ல இளநீர் தருவது மரம்
நல்ல நீரை அருந்தி கழிவு நீரை கழிப்பவன் மனிதன் !

உயர்ந்தவன் தாழ்ந்தவன் பாகுபாடின்றி உயர்ந்த நிழல் தருவது மரம்
உயர்ந்தவன், தாழ்ந்தவன் பாகுபாட்டுடன் உதிரம் சிந்துபவன் மனிதன் !

மரமெனநிற்காதே என மனிதரைத் திட்டி மரத்தை அவமதிக்காதே!
மானிடனே இப்போது சொல் மரம் பெரிதா?நீ பெரிதா?

மரம் !

சுவாசிக்க உதவும்
ரசிக்க உதவும்
மரம் !

பூ காய் கனி நல்கும்
பொதுவுடமைவாதி
மரம் !

அசைவது இல்லை
தென்றல் தீண்டாமல்
மரம் !

வெளியில் தெரியாது
வேர்களின் பயணம்
செழித்திடும் மரம் !

குறிலில் தொடங்கி
மெய்யில் முடியும் மெய்
மரம் !

சிறிய விதையின்
பெரிய பிரமாண்டம்
மரம் !

நீர் குடித்து
மழைநீர் வரவழைக்கும்
மரம் !

சொல்லில் அடங்காது
நல்கிடும் நன்மை
மரம் !

ஆதாம் தொடங்கி அப்துல்
கலாம் வரை நேசிக்கும்
மரம் !

தொட்டில் முதல்
சுடுகாடு வரை
மரம் !

வாழ்ந்தால் நிழல்
வீழ்ந்தால் விறகு
மரம் !

வெட்டும் வில்லனுக்கும்
நிழல் தந்தது
மரம் !

இயற்கையின் விசித்திரம்
சிறிய விதை
பெரிய விருட்சமானது !

திருமணத்திற்கு வாழை
மரணத்திற்கு மூங்கில்
தொடரும் மரத்தின் உறவு !

கருத்துகள்