தன்னம்பிக்கை கவிதைகள் ! கவிஞர் இரா .இரவி !

தன்னம்பிக்கை கவிதைகள் !    கவிஞர் இரா .இரவி !

வெற்றி சில நிமிடங்களில் கிட்டிட
வாழ்க்கை திரைப்படம் அன்று !
பயிற்சி செய் ! முயற்சி செய் !
தோல்வி கிடைத்தால்
காரணத்தை ஆராய்ந்தால்
அடுத்தப் போட்டியில்
அதனைத் தவிர்த்திடு !
வெற்றி வசமாகும் !
வாழ்க்கை வசந்தமாகும் !

நினைத்தது கிட்டும் !

என்னால் முடியும் !
என்றே முயன்றால் !
முயன்றது முடியும் !
என்னால் முடியாது !
என்றே நினைத்தால் !
முயன்றது முடியாது !
யாரை நீ நம்பாவிட்டாலும் !
உன்னை நீ நம்பு !
நினைத்தது கிட்டும் !

இனிதே பயன்படுத்து !

பொழுதைப் போக்குவதல்ல
பொன்னான வாழ்க்கை !
பொழுதைத் திட்டமிடு !
பழுது நீங்கும் !
ஒவ்வொரு வினாடியும்
ஒவ்வொரு வைரம் !
போன பொழுது
திரும்ப வராது !
இருக்கும் பொழுதை
இனிதே பயன்படுத்து !

நெஞ்சில் நிறுத்து !

வென்றவர்களின் வரலாறு படித்திடு !
வென்று நீயும் வரலாறு படைத்திடு !
சாதித்தவர்களின் சாதனை அறிந்திடு !
சாதித்து சாதனை புரிந்திடு !
உண்டு உறங்கி வாழ்வதல்ல வாழ்க்கை !
கண்டு இறங்கி சாதித்து வாழ்ந்திடு !
எதிர்மறை சிந்தனைகளை
அகராதியிலிருந்து அகற்று !
நேர் மறை சிந்தனைகளை
நெஞ்சில் நிறுத்து !

வெற்றி வசமாகும் !

வெந்த சோறு தின்று !
விதி வந்தால் சாவேன் !
என்று சொல்வதை நிறுத்து !
மதியால் சாதித்து வாழ் !
மண்ணுலகம் போற்றிட வாழ் !
சராசரியாக காலம் கழிக்காதே !
சாதிக்கப் பிறந்தவன் நீ !
வித்தியாசமாக சிந்தித்து !
விவேகமாக செயல்படு !
வெற்றி வசமாகும் !

உலகம் வரவேற்கும் !

தாழ்வு மனப்பான்மை உன்னை
தாழ்த்தி விடும் !
உயர்வாக எண்ணு ! உன்னை நீ
உயர்வாக எண்ணு !
உன்னுள் திறமைகள்
ஓராயிரம் உண்டு !
இருக்கும் திறமைகளை
இனிதே பயன்படுத்து !
உன்னை என்றும்
உலகம் வரவேற்கும் !

திறந்தே இருக்கும் !

வாய்ப்பு உன் வாசல் வந்து
கதவைத் தட்டுமென்று காத்திருந்து
பொன்னான பொழுதை வீணாக்காதே !
வாய்ப்பு எனும் வாசல் தேடி
நீ சென்றால் கதவைத் தட்ட வேண்டாம் !
திறந்தே இருக்கும் !

மன நிலையைப் பெற்றிடு !

ஒரே ஒரு முறை முயற்சி செய்து விட்டு
தோற்றதும் துவண்டிடும் மன நிலை விடு !
வெற்றி கிட்டும்வரை முயற்சி செய்யும்
மன நிலையைப் பெற்றிடு !

கருத்துகள்