பெங்களூரு பாவாணர் பாட்டரங்கம் தந்த தலைப்பு ! வெளிச்சம் தேடும் வேளாண்மை ! கவிஞர் இரா .இரவி !






பெங்களூரு பாவாணர் பாட்டரங்கம் தந்த தலைப்பு !

வெளிச்சம் தேடும் வேளாண்மை ! கவிஞர் இரா .இரவி !

இருளில் மூழ்கி வருகிறது வேளாண்மை 
இருளை நீக்கி வெளிச்சம் பாய்ச்ச வேண்டும் !

அயல்நாட்டு குளிர்பானங்கள் குடிப்பதை 
அறவே நிறுத்திட அனைவரும் முன்வர வேண்டும் !

அயல்நாட்டு உரங்களையும்   பூச்சி மருந்துகளையும்
அறவே ஒழித்து இயற்கை உரம் மருந்து தெளிப்போம்  

வேளாண்மையால் விளைந்து வரும் சத்து மிக்க
வெப்பம் தணிக்கும் இளநீர் அருந்திட வேண்டும் !

வேளாண் பொருள் விலையில் பேரம் பேசாதீர்கள் 
வேளாண் செழிக்க அனைவரும் துணை நில்லுங்கள் !

உழவன் படும் துன்பத்தை நினைத்துப் பாருங்கள் 
ஒன்றை விளைவிக்க படும் பாட்டை உணருங்கள் !

இயற்கை   மழையோ பொய்த்து வாட்டுகின்றது 
இரக்கமில்லா மனிதர்களும் தர மறுக்கின்றனர் !

கடன் வாங்கி நட்டதில்   நட்டம் அடைகிறான் 
கரும்பு நெல் எது நட்டாலும் நட்டம் அடைகிறான் !

ஒரு நாடு செழிக்க வேண்டுமானால் வேளாண்மை 
ஓங்கினால்தான் நாடு செழிக்கும் உணர்வோம் ! 

மனிதஇனம் உயிர் வாழ உணவு அவசியம் 
மற்ற அனைத்திலும் உயர்வானது வேளாண்மை !

ஊருக்கே சோறுப் போட்டவன் வாடலாமா ?
ஊர் கூடி உதவிடுவோம் உழவர்களுக்கு ! 

மனம் வெறுத்து தற்கொலை செய்ய விடலாமா ?
மாந்தநேயம் காக்க உழவர்களைக் காப்போம் !

இதுவரை தற்கொலை செய்த எண்ணிக்கை போதும் 
இனி ஒருவரையும்  தற்கொலை செய்ய விடாது காப்போம் ! 

வெளிச்சம் தேடும் வேளாண்மைக்கு எல்லோரும் 
வெளிச்சம் பாய்ச்சிட உதவிக்கரம் நீட்டுவோம் !




கருத்துகள்