இரா. இரவியின் படைப்புலகம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் தமிழ்த் தேனீ இரா .மோகன் ! நூல் மதிப்புரை ஏர்வாடி எஸ் .இராதா கிருஷ்ணன் !

இரா. இரவியின் படைப்புலகம் 

(கட்டுரைகள்)
நூல் ஆசிரியர் தமிழ்த் தேனீ இரா .மோகன் !

நூல் மதிப்புரை ஏர்வாடி எஸ் .இராதா கிருஷ்ணன் !
ஆசிரியர் “கவிதை உறவு  மனிதநேய இலக்கியத் திங்களிதழ்
மலர் 30, இதழ் 3, மார்ச் 2017
420
-E, மலர்க் குடியிருப்பு, அண்ணா நகர் மேற்கு, சென்னை-600 040.
--------------------------------------------------------------------------

வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு, தி. நகர், சென்னை 600 017.  பக்கங்கள் 104; விலை ரூ. 70/-
***********
நூல் மதிப்புரை : 
***********
     கவிஞர் இரா. இரவி அவர்கள் வளரும் கவிஞரென வரவேற்கப்-படுகிறவர்.  அவரது வளர்ச்சியை அவரது படைப்புகள் உறுதிப்-படுத்துவதைப் போல, அவரை வளர்ந்தோங்கச் செய்திருக்கிற பேராசிரியர் இரா. மோகன் அவர்களும் வாழ்த்தி வரவேற்று வருகிறார்.  இரவியின் 16 நூல்களில் 10 நூல்களுக்குப் பேராசிரியர் அவர்கள் கவிஞருக்கு வழங்கியுள்ள அணிந்துரைகளின் தொகுப்பு இந்நூல்.

 அணிந்துரை தருவதற்கு அசாத்தியமான பொறுமையும் வேண்டும், பரந்த மனமும் வேண்டும். பொழுதைப் பிறருக்கு வழங்க மறுப்போர் நடுவே மோகன் அவர்கள் அடுத்தவருக்குத் தம் நேரத்தைச் செலவழிப்பதில் நெஞ்சம் நிறைகிறவர்.  கவிஞர் இரவியின் கவிதைகளை வரிவரியாக ரசித்துப் பாராட்டி வாழ்த்தி மகிழ்ந்துள்ள பேருள்ளம் இப்புத்தகத்தில் பளிச்சிடுகிறது. 

 முதல் நூலே விழிகளில் ஹைக்கூ என்கிற கவிஞரின் வித்தகம் விளங்கும் விரிந்த பக்கங்கள் பொதிந்தவை.  பேராசிரியர் இக்கவிதை மணித்திரளில் கண்டெடுத்த மணிகள் அருமை. “ஒரு பக்கத்தைக் காட்டினால் மறு பக்கத்தையும் காட்டு, பார்த்து எழுதிய மாணவன்’’” நகைச்சுவை இழைந்த நாட்டு நடப்பு இது.  “கணவனை மயக்கி மனைவி சாதனை, மாமியார் முதியோர் இல்லத்தில்’’.  நிதர்சனமான உண்மையிது.  அரசியலையும் அவ்வப்போது நமது ரவி சாடுவார்.  
எடுத்துக்காட்டாக எத்தனையோ கவிதைகளைச் சொல்லலாம்.  “பாம்பின்கால் பாம்பறியும் 
ஆளும் கட்சி ஊழல் 
எதிர்க்கட்சி அறியும்” 
இதை நாமும் அறிவோம். 
                கவிஞர் ரவி என்றதும் நினைவுக்கு வருகிற ஹைக்கூ, “தமிழன் என்று சொல்லடா 
தலைநிமிர்ந்து நில்லடா.... 
ஆங்கிலக் கையொப்பம் ஏனடா....” 
 இதைப் பல மேடைகளில் பேச்சாளர்களும் கவிஞர்களும் மேற்கோள் காட்டக் கேட்டிருக்கிறோம்.
‘என்னவள்’ என்பது கவிஞரின் காதல் பொதிந்த கவிதைகளின் புதையல், “என்னவளே..... எனது பெயர் சொல்லி யாராவது அழைத்தாலும் தாமதமாகத்தான் கவனிக்கிறேன்.  உனது பெயரை யாராவது அழைத்தால் உடனே கவனிக்கிறேன்.  காதல் தாக்கிய எவருக்கும் அறியக் கிடைக்கும் அறிகுறி இது.  இதயத்தில் ஹைக்கூ என்ற இவரது தொகுப்பில்,
“சுனாமி வருவதாய் 
மருமகள் பேச்சு 
மாமியார் வருகை”’’ 
என்ற வரிகளும் பிரபலமானவை. 
அணிந்துரை என்பது பாராட்டாக மட்டும் இருப்பதற்கு மேல், கொஞ்சம் பாடம் சொல்வதுவுமாகச் செய்திருப்பதில் பேராசிரியர் மோகன் அவர்கள் தம்மை ஒரு தமிழாசிரியராகவும் நிறுவியுள்ளார்.  “வாழ்க்கை இதுதான்.  செத்துக் கொண்டிருக்கும் தாயருகில் சிரித்துக் கொண்டிருக்கும் குழந்தை”’’ என்ற அறிவுமதியின் ஹைக்கூ“சாகும் தாய் அருகில் சிரிக்கும் குழந்தை’’”  என்றிருக்க வேண்டும் என்று தம் அணிந்துரையில் கவிக்கோ அப்துல் ரகுமான் குறிப்பிடுவதை மேற்கோள் காட்டி, ரவியும் தம் ஹைக்கூ ஒன்றினால் சொல்வதாக மோகன் அவர்கள் எடுத்தாண்டிருப்பது சிறப்பு.  
         
“மூன்று வரி முத்தாய்ப்பு ஹைக்கூ’’”.  இது ரவியின் ஆலோசனை அவரே கடைப்பிடிக்கும் அனுபவம் 

“சுட்டும் விழி” எனும் தொகுப்பில்,
 “அசுத்தம் 
 சோறு போடும் 
 துப்புரவுத் தொழிலாளி”’’ என்ற ரவியின் ஹைக்கூவை மேற்கோள் காட்டி, ஹைக்கூ என்பது உணர்வு இலக்கியம் என்று இறையன்பு கூறும் கருத்தைப் பிணைத்துப் பாராட்டுகிறார் மோகன் அவர்கள்“பொம்மை உடைந்தபோது மனசு உடைந்தது குழந்தை”’’.  இதுவும் கவிஞரின் உணர்வு வெளிப்பாடு,

கவிஞர் ரவிக்குக் ‘கோபம் வரும்’ என்பதைப் பல கவிதைகள் நமக்குப் புலப்படுத்துவதை மோகன் அவர்கள் குறிப்பிடத் தவறவில்லை.  “படிப்பு எதற்கு அடுப்பூதும் பெண்களுக்கு. செருப்பாலடி சொல்பவனை’’” எனும் ரவியின் வரிகளில் சினம் சுடுவதைக் காண முடிகிறது.

பின்னிணைப்பாக கவிஞர் ரவியின் சாதனைகளையும் சிறப்பு-களையும் பட்டியலிட்டிருக்கிறார் பேராசிரியர்.  படிக்க இனிக்கிறப் பதமான நூல்.  பக்குவமாகப் பந்தி வைத்திருக்கிறார் பேராசிரியர் மோகன் அவர்கள்.

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://tamil.pratilipi.com/kavignar-eraravi

கருத்துகள்