“வெளிச்ச விதைகள்” நூல் ஆசிரியர் கவிஞர் இரா . இரவி நூல் மதிப்புரை கவிஞர். சி. விநாயகா மூர்த்தி,



“வெளிச்ச விதைகள்”

நூல்  ஆசிரியர் 
கவிஞர்  இரா . இரவி
நூல் மதிப்புரை
கவிஞர். சி. விநாயகா மூர்த்தி,
33 Bகீழப்பட்டித் தெரு, திருவில்லிபுத்தூர்- 625 125. 
கைபேசி: 97915 62765.


வெளியீடு ; வானதி பதிப்பகம்.
 பக்கம் .190  விலை ரூபாய்   120
23. தினதயாளு தெரு 
தியாகராயர் நகர் 
சென்னை 600 017.
பேச  044- 24342810 /  24310769
மின்  அஞ்சல்  vanathipathippakam@gmail.com

*******************
      விதைகளால் விருட்சங்கள், பசுமை வெளிச்சம் பெறுகின்றன.  விதைகளுக்கு புகழ் வெளிச்சம் தருகிறார் கவிஞர் இராஇரவி அவர்கள்.

      இவர் தூவிய விதைகளால், வானோங்கி வளர்ந்துள்ள விருட்சங்கள் பதினாறு.  இன்னும் இன்னும் மண்வாசனையுடனும், பண்வாசனையுடனும் தழைத்தோங்கும் பல தாவரங்கள், தமிழ்த்தென்றல் வீசும். 

      இந்நூல், சித்திர முகப்பு - முத்திரைப் பதிப்பு. 
      அத்தனை படைப்பும் முத்துக்களின் தொகுப்பு.

இவர் விருட்சங்களில், பழுத்துத் தொங்கும் ஹைகூகனிகளும், பூத்துக் குலுங்கும் புதுக்கவிதைப் பூக்களும், அயலகப் பறவைகளையும் ஈர்க்கும் திறம் உடையவை.

      கலைஞன் நான் கொஞ்சம் கூறுவேன்.

      “உயிரும் மெய்யும், உயிர், மெய்யும் இணைந்த
      உயிர்கள் உச்சரிக்கும் உன்னதச் சொல் அம்மா.”

புதிய கோணத்தில் புனைந்த பொற்சித்திரம்.

      “மகனுக்கு அறிவைக் கற்பிப்பவர் தந்தை” என்கிறார்.

      புறநானூற்றில், பொன்முடியார் என்னும் பெண்பாற்புலவர் “சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே” என்றதை வழிமொழிகிறார்.

      “தாய் உன்னத உறவு;”
      “தந்தை ஒப்பற்ற உறவு;”

தலைப்பூ தமிழ் மனம் கமழ்கிறது.
மகனைப் பற்றிய கவிதையில்.

      “புயலைத் தென்றலாக்கும் வித்தை
      தென்றலைப் புயலாக்கும் விவேகம்”

என்ற வரிகள் அமைந்துள்ள கவிதைக்கு
      “இல்ல இளவரசி” இனிய தலைப்பு.

      “ஒரு பெண் படித்தால், குடும்பத்துக்கே நன்மை”
பாவேந்தரின் கருத்தை அழுத்தமாக வலுயுறுத்துகிறார்.

      “கொஞ்சம் விட்டுக் கொடுத்தால் இனிக்கும்
      வசமாகும் வானம்”

மனைத்தக்க மாண்புடைமைக்கு தேவையான பாட(ல்) வரி புதிய ஆத்திச்சூடியில்,

      “ஏன் எனக் கேள்” எவரும் சொல்லாத இணையற்ற வரி.

      பண்டைத் தமிழரின் பழம் புகழ் பாடுவதோடு நில்லாமல், நடப்பியல் சிறப்பும் வரிசைப் படுத்திக் கூறுகிறார்.

      “பொக்கரானில் அணுகுண்டு வெடித்தவன் தமிழன்
      சந்திரனுக்கு சந்திராயன் அனுப்பியவன் தமிழன்
      சிம்பொளி இசைத்து பிரமிக்க வைத்தவன் தமிழன்
      ஆஸ்கார் விருது இரண்டை வென்றவன் தமிழன் !

      அழியும் மொழிகளில் பட்டியலிட்ட ஐ.நா. மன்றமே ஆச்சரியம் அடைந்தது இணையத்தில் தமிழ்வளர்ச்சி கண்டு. சிந்தைக்குரிய செந்தமிழின் விந்தைக்குரிய வளர்ச்சியை நெகிழ்ந்து, மகிழ்ந்து, புகழ்ந்து பாடுகிறார் கவிஞர்.

      “உலகம் முழுவதும் தமிழன் வாழ்கிறான்;
      உள்ளூரில் தமிழ் வாழ்கிறதா?”

வேதனையை வெறுப்புடன் துடிப்புடன் வெளிப்படுத்துகிறார்.

      “பத்து சொற்கள் பேசினால் - அதில்
      பாதிச் சொற்கள் ஆங்கிலம்”
      “தொலைக்காட்சியில் தமிழ்க்கொலை”

விம்பி, வெதும்பி, வெம்பி வருந்துகிறார்.

      “அடுத்த பிறவி இருந்தால் திருக்குறள் படிக்க
      அற்புதத் தமிழனாய் பிறக்க விரும்பினார் காந்தி”

காந்தியின் தமிழ்ப்பற்று, தமிழனுக்கில்லையென்று வெந்து, நொந்து, புலம்புகிறார்.

      தமிழக மீனவர்களை மீட்க, முந்நாள், இந்நாள் வருங்கால முதல்வர்கள் எழுதும் கடிதங்கள்.

      தொலைந்துபோவதை துயரமுடன் குறிப்பிடுகிறார்.

கட்சித்தீறைகளின் தனிக்காட்டு ராஜாக்களாகிய தலைவர்கள் கட்சித்தீயை மீட்பது தான் மீனவர்கள் மீள ஒரே வழி.

      “கோடிகள் திருடிய கேடிகள் கைதாகிப் பிளையில் -
       பசியின் கொடுமையால் ரொட்டி திருடிய ஏழையோ
       பாழும் சிறையில்....

      முரண்பட்ட சட்டத்தின் முகமூடி கிழிக்கிறார்.

“எட்டடுக்கு மாளிகையில் வாழ்கிறது தெருகூட்டம்
      எட்டுக்கு எட்டு வீட்டில் வாழ்கிறது ஒரு கூட்டம்”

      ஏற்றத்தாழ்வை, இழிநிலையை, எடுத்துரைத்து, இடித்துரைக்-கிறார்.
தலையெழுத்து ஒன்று இல்லவே இல்லை.
பொன்னெழுத்தில் பொறிக்கும் கவிதையை தன்எழுத்தில் வடித்துத் தருகிறார்.

சீரிய சிந்தனையும், சீறிய சிந்தனையும், கூரிய மொழிகளில் கூறிய கவிஞர் அழகியல் கவிதைகளும் புனைந்துள்ளார்.

“நிலவு” கவிதை அமுது பொழிகிறது, அழகு வழிகிறது
      “பசியோடு பார்ப்பவனுக்குத் தோசை நீ,
      பரவசத்தோடு பார்ப்பவனுக்குப் பால்நிலா நீ,
      விளையாட்டு வீரன் பார்வைக்குப் பந்து நீ.”

மேலும் பல உவமைகளைத் தோரணமாய் தொங்கவிடுகிறார்.

      “ஆண்டொன்று போனால் வயதொன்று கூடும்
      ஆண்டாண்டு காலமாய் வாழும் உன் வயதென்னவோ? 

“உன்னால் மனிதன் வாழலாமா? என ஆராய்ச்சி -
 உன்னால் மனிதன் வாழ்ந்தால் மாசாக்கி விடுவான்”

      அழ ரசித்து ஆனந்தப்படுகையில் அச்சத்தையும் வெளியிடுகிறார்

      அலைகள் தான் கடலுக்கு அழகு.”
      “நீரை விடுத்து பாலை அருந்தும் அன்னம்
      நல்லவை ஏற்று அல்லவை நீக்கிடுவோம்”
      “காதலர்கள் அழிந்தாலும் காதல் அழிவதில்லை”
      “குடைக்கு வெளியே சாரல் மழை.
      குடைக்கு உள்ளே மகிழ்ச்சி மழை”

      பாதச்சுவடுகள் பற்றி நிறையவே சிந்தித்துள்ளார்.

      வேண்டாம் வேண்டாம் இனி மேல் வேண்டாம்;
      காதல் கொலை இனி எங்கும் வேண்டவே வேண்டாம்;
      கவிஞரோடு சேர்ந்து அனைவரும் சொல்வோம்.

உயரத்தில் இருக்கும் நட்சத்திரங்களின் கவியரங்கம் தலைமைக் கவிஞன் நிலவு.

      புதிய உவமை.
“கரி, காசாகுது நெய்வேலியில்
 காசு, கரியாகுது தீபாவளியில்”

      இவ்வரியில், முரண்தொடை நயம் தூக்கலாக உள்ளது.
“வினாடியின் மதிப்பு, விளையாட்டு வீரன் அறிவான்-
      நிமிடத்தின் மதிப்பு, விமானப்பயணி அறிவான்”

காலத்தின் அருமையை இதைவிடச் சிறப்பாக யாரும் சொல்லமுடியாது.
“அலைபேசி, கணினி, தொலைக்காட்சி என்று ஆயிரம் வந்தாலும் புத்தக சுகம் கிடைப்பதில்லை.

“காகிதத்தில் உள்ள எழுத்துக்களை வாசிப்பது
குழந்தைகளின் சிரிப்புபோல இனிமையானது”

இது முற்றிலும் உண்மையென்று, இரா. இரவி அவர்களின் நூல்களை வாசித்தால் இன்பம் துய்க்கலாம்.

“வாக்கு உன்செல்வாக்கு
நினைவில் நிலைத்து நிற்க வேண்டிய வரி.

“ஒட்டுமொத்த சாதியின் பங்களிப்பே உன் வாழ்வு

ஒருமைப்பாட்டை விளக்கும் உரிமைப்பாட்டை இவர்பாடுகிறார்.
“என் தேசம் என் சுவாசம்!

என்று, இவரோடு சேர்ந்து அனைவரும் சொல்ல வேண்டும்.

      தங்கமகன் தங்கவேலு மாரியப்பன், தங்க மங்கை சிந்து, மானம்காத்த மங்கை சாக்சி மாலிக், தந்தை பெரியார், மாமனிதர் அப்துல் கலாம், பாடகர் திருவுடையான் இவர்களைப் பாராட்டி, புகழ் மகுடம் சூட்டியதோடு,

      இவருக்கு உற்றுழி உதவும் பலரை, செய்ந்நன்றியுடன், கவிமலர்களால் மாலை சூட்டியுள்ளார்.

      தமிழ்த்தேனீ   இரா. மோகன், முதுமுனைவர் இறையன்பு , கவிஞர் முருகேசு. கவிதை உறவு ஏர்வாடியார், திருச்சி சந்தர், கவிமாமணி சி. வீரபாண்டியத் தென்னவன் மற்றும் பலரை புகழ் சிம்மாசனத்தில் ஏற்றியுள்ளார்.

      “ஆன்றோரின் கருத்துக்களே வெளிச்ச விதைகள்” என்று விளக்கம் தருகிறார்.

      “என் ஓட்டம் என் இலக்கு, ஓடிக் கொண்டே இருக்கிறேன்” என்கிறார், பாடிக்கோண்டே ஓடுகிறார் அவர் சொல்வது போல்

      “என் இலக்கு அடையும் நாள் தூரத்தில் இல்லை” என்று நாமும் நம்புவோம். 
அவர் தொடர்பயணம் வாகைசூட நானும் நட்புடன் வாழ்த்துகிறேன்.



நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://tamil.pratilipi.com/kavignar-eraravi

கருத்துகள்